பல கோடி இந்தியர்களை ஒரு நோய் அமைதியாக பாதித்து வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம் நம்பிதான் ஆக வேண்டும். இதுதான் நிஜம். உயர் ரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சன் என கூறப்படும் இந்நோயினால் தான் பல இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 20 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் இந்தியாவில் ஹைபர்டென்சனால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ICMR) கூறுகிறது. இதில் இரண்டு கோடி நபர்கள் மட்டுமே ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இதனால் ஹைபர்டென்சன் இந்தியாவில் வளர்ந்து வரும் தீவிர பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதன் பின்னால் உள்ள காரணங்களை விளக்குகிறார் டெல்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமணையின் இயக்குனர் டாக்டர்.ராஜீவ் குப்தா.
ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்:
மோசமான உணவுப்பழக்கம், உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, போதுமான தூக்கம் இல்லாமை போன்றவை எல்லாம் சேர்ந்து ஒருவரிடம் ஹைபர்டென்சனை உருவாக்குகிறது.
டயாபடீஸ் மற்றும் மெடபாலிக் நோய்க்குறி:
இந்த இரண்டுமே ஹைபர்டென்சன் வரும் ஆபத்தை அதிகரிக்கிறது.
மரபணு:
ஹைபர்டென்சன் வருவதற்கு ஒருவருடைய வாழ்க்கைமுறை முக்கிய பங்கு வகித்தாலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மரபணுவும் இதில் பங்காற்றுகிறது.
வயதான மக்கள்தொகை:
பல்வேறு மருத்துவ வசதிகள் காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால், இயற்கையாகவே ஹைபர்டென்சன் நோயினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இத்தனை கோடி பேர் ஹைபர்டென்சன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இது பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுக்கும். நிச்சியம் இது இந்திய சுகாதார கட்டமைப்பில் கடுமையான அழுத்தங்களை உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பக்கவாதம், இதயம் செயலிழப்பு, புற தமனி நோய் போன்ற உயிரைப் பறிக்கும் பல நோய்களுக்கும் முக்கிய காரணியாக உயர் ரத்த அழுத்தமே உள்ளது.
உப்பு: சைலன்ட் கில்லர்
இந்தியர்களின் ஆரோக்கியம் கெட்டுப்போவதற்கு அதிகப்படியான உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக ICMR கூறுகிறது.
அதிகப்படியான உப்பு உட்கொள்வதற்கும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. பாரம்பரியமான இந்திய உணவுகளில் பெரும்பாலும் உப்பு நிறைந்தவை ஆகும். இதனால் இளம் வயதிலேயே நமக்கு பிரச்சனை தொடங்கிவிடுகிறது. பதப்படுத்தப்பட்ட உனவுகள், ரிஃபைண்டு ஆயில்கள், நம்முடைய தினசரி உணவுப்பழக்கம் போன்றவை இதில் கணிசமான பங்கை வகிக்கின்றன.
சரி, எப்படி ஹைபர்டென்சன் வராமல் தடுப்பது?
குறைவான உப்புள்ள டயட்டை பின்பற்றுங்கள். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவாக இருந்தால் அதில் எவ்வுளவு உப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வாங்குங்கள்.
உங்கள் டயட்டில் பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
சீரான உடற்பயிற்சி, நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது, டயாபடீஸை கட்டுக்குள் வைத்துக்கொள்வது போன்றவை உயர் ரத்த அழுத்தத்தை எதிர்த்து போராட முக்கியமான ஆயுதமாகும்.
முக்கியமாக உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் இன்றோடு அதை நிறுத்திவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் அதன் விவரங்களை லேபிளில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் சட்டம் இயற்றுவதன் மூலம் அரசாங்கமும் இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
Also read | கோடைகாலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்பற்ற வேண்டியவை!
அதிகப்படியான உப்பு சேர்த்தால் என்ன மாதிரியான ஆபத்துகள் வரக்கூடும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
அதேப்போல் பள்ளி மற்றும் பணியிடங்களில் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
இளம் வயதிலேயே அடிக்கடி ரத்த அழுத்த அளவை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ வசிகளை அதிகப்படுத்த வேண்டும்.
- Follow us onFollow us on google news