கர்நாடக மாநிலம் மைசூருவில் பிரபல கன்னட நடிகை வித்யா பயங்கர ஆயுதத்தால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூர் ஸ்ரீராம்பூரைச் சேர்ந்தவர் நடிகை வித்யா. இவர் சிரஞ்சீவி சர்ஜாவின் ‘அஜித்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். அத்துடன் சிவராஜ்குமார் நடித்த ‘பஜ்ரங்கி’ படத்திலும் இவர் நடித்துள்ளார். அது மட்டுமின்றி பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த வித்யா, காங்கிரஸ் கட்சியின் மைசூரு நகரச் செயலாளராக பொறுப்பில் இருந்தார். மைசூருவில் பன்னூர் துர்கானூரில் கணவர் நந்தீஷ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக வித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நள்ளிரவு வழக்கம் போல இருவரும் சண்டை போட்டு கொண்டனர். கடும் சத்தத்துடன் இருவரும் மோதி கொண்ட நிலையில், மறுநாள் செவ்வாய் கிழமை விடிந்ததும் அந்த படுபயங்கரம் வெட்ட வெளிச்சமானது. வீட்டிற்குள் வித்யா தலையில் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்து சென்ற பன்னூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர். நடிகை வித்யாவை கொலை செய்தது யார்? கொலையின் பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போதுதான் சம்பவம் அரங்கேறும் போது வீட்டிலிருந்த அவரது கணவர் நந்தீஷ், பின்னர் திடீரென்று தலைமறைவானது தெரியவந்தது. இதனால் வித்யா கொலை வழக்கில் அவரது கணவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள நந்தீஷை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவான நந்தீஷை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததில் சண்டை ஆத்திரம் ஏற்பட்டு மனைவியை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து நந்தீஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Follow us onFollow us on google news